சினிமா

கே.வி சாரின் ’கோ’ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது; இப்போது இணைய இருந்தோம் - சிம்பு

sharpana

இயக்குநர் கே.வி ஆனந்த் மறைவிற்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதம் கேவி ஆனந்த் சாருடன் ’கோ’ படத்தில் நான் நடித்திருக்கவேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லி இருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லியிருந்தேன். தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக்கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.பொய் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்.

இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறைய படங்களை தொடர்ந்து தந்திருப்பார். அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் திரையுலகினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.