சினிமா

சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்க சிலம்ப வீரர்களுக்கு உதவிய நடிகர் சிரிஷ்

sharpana

சிலம்ப விளையாட்டு வீரர்கள் நேபாளத்தில் நடக்கும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள நிதி உதவி செய்துள்ளார் நடிகர் சிரிஷ்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ரோ’படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் சிரிஷ் தற்போது ‘பிஸ்தா’ படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் வித்தியாசமான கலகலப்பான டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சிரிஷ் சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஏற்கனவே, இலவச தடுப்பூசி முகாம் நடத்தி பாராட்டுக்களைக் குவித்தார். இந்த நிலையில், தமிழகத்தின் இரண்டு சிலம்பாட்ட வீஅர்களுக்கு சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள உதவி செய்துள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசும்போது “11 ஆம் வகுப்பு படிக்கும் நான்சி எஸ்தர் மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக ராஜன் ஆகிய இந்த திறமையான குழந்தைகளைப் பற்றிய செய்தியை ஒரு பரஸ்பர நண்பர் மூலம் அறிந்தேன். அவர்களின் திறமையையும் சாதனையையும் பார்த்த பிறகு உண்மையில் பிரமித்து போனேன். இருவரும் பல மாவட்ட மற்றும் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளனர். அவர்களிடம் திறமைகள் இருந்தபோதிலும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நேபாளத்தில் நடக்கவிருந்த யூத் கேம்ஸ் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை என்பது ஏமாற்றமளித்தது.

இந்தக் குழந்தைகள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவர்களின் பயண மற்றும் தங்கும் செலவுகளை நான் பார்த்துக்கொள்ள முடிவு செய்தேன். எதிர்காலத்திலும் திறமையான நபர்களை ஊக்குவித்து தொடர்ந்து இது போன்ற உதவிகளை செய்வேன் என்று கூறியுள்ளார்” கூறியுள்ளார். நடிகர் சிரிஷின் இந்த உதவும் குணத்திற்கும் செயலுக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.