actor sheshu
actor sheshu pt
சினிமா

“அச்சச்சோ அவரா ரொம்ப பயங்கரமான ஆள் ஆச்சேப்பா..” நகைச்சுவை நடிகர் சேஷு சிகிச்சை பலனின்றி காலமானார்!

யுவபுருஷ்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சேஷு(60). நகைச்சுவையில் தனி இடம் பிடித்த இவர், சமீபமாக பெரும்பாலான படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக நடிகர் சந்தானத்தின் படங்களில் பிரதானமாக நடித்து வந்தார் சேஷு.

ஏ 1 படத்தில் அவர் ஏற்று நடித்த பாத்திரமும், அவர் உச்சரித்த வசனங்களும் மீம் டெம்ப்ளேட்டுகள் ஆனவை என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, சந்தானத்தின் மாமனார் இறந்த உடன், அவரது வீட்டிற்கு சந்தானமும் அவரது நண்பர்களும் வீட்டிற்கு செல்வர். அங்கு சென்று நாம் கொலை செய்த செய்தி யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று ஆலோசித்துக்கொண்டிருப்பார்கள். இதற்கிடையே, பாத்ரூமில் இருந்து வெளியே வரும் சேஷு, காமெடியாக பேசுவார்.

இதற்கிடையே, சேஷுவிடம் நீங்கள் யார் என சந்தானம் கேட்க, “நான் யாருன்னு என்ன கேட்குறவிட, வேற யார்கிட்டயாச்சும் போயி, அவரு யாருன்னு கேட்டு பாரு.. அச்சச்சோ அவரா ரொம்ப பயங்கரமான ஆள் ஆச்சேப்பா. அவருகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க அப்டின்னு சொல்லுவா” என்று கலக்குவார் சேஷு. இதற்கு ஏற்றபடி, சந்தானமும் வெளியே செல்ல, எங்கு போகிறீர்கள் என்று கேட்பார் சேஷு. அதற்கு, உங்களைப் பற்றி கேட்டுவிட்டு வருகிறேன் என்று சந்தானமும் அவரது கேங்கும் சொல்லிவிட்டுச் செல்வர்.

அதேபோல், சமீபமாக வெளியான வடக்குபட்டி ராமசாமி படத்திலும் கலக்கோ கலக்கு என்று கலக்கியிருப்பார் சேஷு. மெட்ராஸ் ஐ நோயை பரப்புகிறேன் என்று அவர் செய்த அட்ராசிட்டி எல்லாம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும். இப்படியாக இருக்க, மாரடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சேஷு.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், சிகிச்சைப் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது குடும்பத்தார் மற்றும் திரையுலகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.