கீழடி நம் வரலாறு. அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் கீழடி வைகை நதி நாகரிகம் சிறப்பு மாநாட்டில் நடிகர் சசிகுமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ கீழடி உண்மையில் வெற்றியடைந்ததற்கு காரணம் சு.வெங்கடேசன். தமிழ் கலாசாரத்தை, பண்பாட்டை தோண்டி எடுக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு அகழாய்வின்போதே கீழடியை நேரில் சென்று பார்த்துள்ளேன். கலாசாரத்தையும், நாகரிகத்தையும் அறிந்து கொண்டேன். அவ்வளவு அர்ப்பணிப்போடு, உழைப்பை புகுத்தி அகழாய்வை செய்து வருகின்றனர்.
கீழடியில் ஒவ்வொரு விஷயமும் முக்கியமானது. அகழாய்வுக்கு பொறுமை தேவை. அந்த பொறுமையோடு அகழாய்வை மேற்கொண்டு வருகின்றனர். கீழடி நம் வரலாறு அதை விட்டுக்கொடுக்க கூடாது. கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைத்தால் பொதுமக்கள் வரலாற்றை அறிந்துகொள்வார்கள். அது சிறப்பாகவும் இருக்கும். கீழடி நம் வரலாறு. அது பாடமாக வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.