சினிமா

”விபத்தில் சிக்கிய நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது”: அப்போலோ மருத்துவமனை

sharpana

”விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது” என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தெலுங்கு ’சூப்பர் ஸ்டார்’ சிரஞ்சீவியின் தங்கை விஜய துர்காவின் மகனும் தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான நடிகர் சாய் தரம் தேஜ் நேற்றிரவு ஹைதராபாத்தின் கேபிள் ப்ரிட்ஜில் தனது ஸ்போர்ட்ஸ் பைக்கில் செல்லும்போது விபத்தில் சிக்கினார். உடனடியாக, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பின்பு,ஜூப்ளி அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்தவுடன் சாய் தரம் தேஜின் மாமாக்கள் சிரஞ்சீவி, நடிகர் பவன் கல்யாண், நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு வந்து உடல்நிலைக்குறித்து விசாரித்தனர்.

மருத்துவமனை நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ”மூளை, முதுகெலும்பு உள்ளிட்ட முக்கிய உறுப்புகளில் பெரிய காயங்கள் இல்லை. ஆனால், தோள்பட்டை முதுகெலும்பில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது” என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு மருத்துவமனை அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில், “சாய் தரம் தேஜின் உடல்நிலை சீராக இருக்கிறது. அனைத்து முக்கியமான உடல் உறுப்புகளும் செயல்படுகின்றன. தொடர்ந்து அவரது உடல்நிலை ஐசியுவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை குறித்த புதிய அப்டேட் நாளை வெளியாகும்” என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் மனைவி உபாசனாவின் தாத்தாதான் அப்போபோ பிரதாப் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. உபாசனாவும் தற்போது அப்போலோ மருத்துவமனையைத்தான் நிர்வகித்து வருகிறார்.