சினிமா

``ஒரு தந்தையாக பாதுகாப்பின்மையை உணர்கிறேன்”- உருக்கமாக பேசிய நடிகர் ரன்பீர் கபூர்

webteam

கடந்த மாதம் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு ராஹா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், ஒரு தந்தையாக பெரிய கவலையுடன் இருப்பதாக தற்போது தெரிவித்துள்ளார் ரன்பீர்.

பல வருடங்களாக காதலித்து வந்த ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், பிரம்மாஸ்திரா படத்திற்கு பிறகு தங்களுக்குள்ளான காதலை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஏப்ரலில் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும், நவம்பர் 6 அன்று ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ரன்பீரின் அம்மாவும் பழம்பெரும் நடிகையுமான நீது கபூர் தேர்வு செய்த ரஹா என்ற பெயரை சூட்டியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரன்பீர் சிங், சமீபத்தில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த ரெட் சீ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு தனது படங்கள், குழந்தை வளர்ப்பு மற்றும் பலவற்றைப் பற்றி பேசியுள்ளார். அவரிடம் `தந்தையான பிறகு உங்களுக்குள் என்ன மாற்றம் ஏற்பட்டது?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசியிருக்கும் அவர், "நான் ஏன் தந்தையாக பொறுப்பேற்க இவ்வளவு நேரம் எடுத்தேன் என்று நான் கவலைப்படுகிறேன். எனது மிகப்பெரிய பாதுகாப்பின்மை என்னவென்றால், எனது குழந்தைக்கு 20 அல்லது 21 வயதாக இருக்கும்போது, எனக்கு 60 வயது நிரம்பி இருக்கும். நான் அவர்களுடன் கால்பந்து விளையாட முடியுமா? நான் அவர்களுடன் ஓடியாட முடியுமா?" என்று தந்தையாக அவர் தவறவிடவிருக்கும் சந்தோசமான தருணங்களைப்பற்றி பேசியுள்ளார்.

மேலும் மனைவி ஆலியா பட் பற்றி கூறும்போது, “குடும்பத்திற்காக நான் அதிகமான வேலையை செய்யவில்லை. ஆலியா, என் இல்லாமையை குடும்பத்தில் சமப்படுத்துகிறார். அவர் இல்லாத நேரத்தில் நானும், நான் இல்லாத நேரத்தும் அவரும் எங்களை பேலன்ஸ் செய்து கொள்கிறோம்” என்று தெரிவித்தார். ரன்பீர் கபூருக்கும் ஆலியா பட்டிற்கும் 10 வயது வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்களை பொறுத்தவரையில், ரன்பீர் கபூர் கடைசியாக மனைவி ஆலியா பட் உடன் நடித்த பிரம்மாஸ்திராவில் வெற்றி பெற்றார். அடுத்ததாக சந்தீப் ரெட்டி வாங்காவின் படத்தில் நடிக்கிறார் ரன்பீர். மேலும் பெயரிடப்படாத லவ் ரஞ்சன் திரைப்படத்தில் ஷ்ரத்தா கபூருடன் இணைந்து அவர் நடிக்க உள்ளார்.