சினிமா

"எனக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் நிறைய தருணங்கள் இருக்கிறது" - ரஜினிகாந்த் பெருமிதம்!

PT

‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்கிற பெயரில் நடைபெறும் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டமாக சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய கண்காட்சி நாளையுடன் நிறைவடைய இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், பல்வேறு பிரபலங்களும் புகைப்பட கண்காட்சியை நேரில் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று புகைப்பட கண்காட்சியை நேரில் பார்வையிட்டார். கண்காட்சியில் உள்ள புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்ட ரஜினிகாந்த், முதலமைச்சர் மிசாவில் கைதாகி சிறையில் இருக்கும் காட்சிகள் சிலையாக வடிதுள்ள இடம் மற்றும் சில புகைப்படங்களுக்கு மத்தியில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.

பின்னர், “அருமையான சேகரிப்பு ( Superb Collection's).. என்ன ஒரு நினைவு (what a memory)” என வருகை பதிவேட்டில் நடிகர் ரஜினிகாந்த் புகைப்பட கண்காட்சி குறித்து பதிவு செய்தார். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “ரொம்ப அருமையான புகைப்பட கண்காட்சி. சேகர் பாபு அழைத்துக்கொண்டே இருந்தார். படப்பிடிப்பில் இருந்ததால் வர இயலவில்லை. அதனால் தற்போது வந்துள்ளேன். சேகர் பாபு ரொம்ப விசுவாசமானவர், அன்பானவர். அவருக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது.

என் இனிய நண்பர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான். 54 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் இருந்தவர். கட்சியில் உழைத்து படிப்படியாக பல பதவிகளை வகித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார் என்று சொன்னால், அது மக்கள் அவர் உழைப்புக்கு அளித்த அங்கீகாரம். நீண்ட ஆயுளுடன் இருந்து அவர் சேவை செய்ய வேண்டும். எனக்கும் முதலமைச்சர் உடனான தருணங்கள் நிறைய இருக்கிறது” எனக் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் உடன், நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் பேட்டியளித்த யோகி பாபு, “முதல்வரின் 70 வருட வாழ்க்கை வரலாறு பயணத்தை இந்த கண்காட்சியின் மூலம் பார்க்க முடிந்தது. அவர் கடுமையான வாழ்க்கையை அனுபவித்திருப்பது தெரியவருகிறது. அவருடைய போராட்டங்கள் அனைத்தும் இந்த கண்காட்சியில் இருக்கிறது. நமக்கு தொடர்ந்து நல்லதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்து வருகிறார். மேலும் பல நல்லதை செய்ய வேண்டுமென கேட்டுகொள்கிறேன்” என்றார்.

இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட இன்னும் சில புகைப்படங்களின் தொகுப்பு, இங்கே: