சினிமா

விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் - நடிகர் ரஜினிகாந்த்

webteam

விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பேட்ட’. இந்தப் படம் பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, நவாஜுதீன், சித்திக் என நட்சத்திரங்கள் பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். 

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’ என்ற பாடலை கடந்த 3-ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். நீண்ட நாட்கள் கழித்து ரஜினிக்கு குத்து பாடல் கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இதையடுத்து ‘உல்லல்லா’ என்ற பாடலும் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில் ’பேட்ட’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பேட்ட திரைப்படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பேட்ட திரைப்படத்தின் நடிகர்கள் அனைவரும் மேடையில் ஏறி தன்னுடையை அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். மேடையில் பேசிய விஜய் சேதுபதி தான் இவ்வளவு பெரிய மனிதனோடு நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். 

பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், '' புயல் பாதிப்பு சீரமைப்புபணிக்கு அனைவரும் உதவ வேண்டும், பணம் இருப்பவர்கள் உதவ வேண்டும். மிகப்பெரிய பாதிப்புக்கு அரசு மட்டும் நிவாரணம் வழங்கிடமுடியாது. கஜா புயலால் வீடு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய நேரம் இது என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் விஜய் சேதுபதியை பார்த்திருக்கேன். நல்ல நடிகன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் பழகிய பிறகுதான் தெரிந்தது அவர் மகா நடிகன். அதேபோல் நல்ல மனிதன். நீண்ட நாள் கழித்து நல்ல நடிகனோடு நடித்த திருப்தி ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.