சினிமா

‘தலைச்சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக மாதவன் நிரூபித்திருக்கிறார்’ - பாராட்டிய ரஜினிகாந்த்

சங்கீதா

நடிகர் மாதவனை, தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார் மாதவன். கடந்த ஜூலை 1-ம் தேதி வெளியான இந்தப் படம், பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான கதைகளை போலன்றி, அர்ப்பணிவுடன் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களும், அவமானங்களும், அதிலிருந்து அவர் சட்டப் போராட்டங்களை நடத்தி மீண்டு வந்த சம்பவங்களுமே கதைக்களமாக எடுக்கப்பட்டிருந்தது பலரையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்தையும், மாதவனின் நடிப்பு மற்றும் இயக்கத்தையும் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். தலைச்சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக மாதவனும் தனது அறிமுகப் படத்திலேயே இயக்குநராக நிரூபித்திருக்கிறார் எனவும், இளைஞர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.