சினிமா

எஸ்.பி.பி கடைசியாகப் பாடிய ரஜினியின் ‘அண்ணாத்த’ பாடல்: அக்டோபர் 4-ல் வெளியீடு

sharpana

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறப்பதற்குமுன் கடைசியாக 'அண்ணாத்த' படத்தில் பாடிய பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்
சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி உயிரிழந்தார். அவர், இறப்பதற்குமுன் கடைசியாக ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில்தான் பாடல் பாடியிருந்தார். இதனை, இசையமைப்பாளர் இமான் கடைசிப்பாடலை 'அண்ணாத்த' படத்திற்காக எனது இசையில் எஸ்.பி.பி பாடியது ஆசிர்வாதம்' என்று குறிப்பிட்டார். பாடலாசிரியர் விவேகாவும் 'அண்ணாத்த' பாடல் பதிவின் புகைப்படங்களைப் பகிர்ந்து 'எஸ்.பி.பியின் கடைசி பாடல்' என்று அஞ்சலி தெரிவித்தார்.

இந்த நிலையில், வரும் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 'அண்ணாத்த' படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. ரஜினிக்கு ஓப்பனிங் பாடலை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. எஸ்.பி.பி ரஜினிக்கு கடைசியாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'தர்பார்' படத்தில் 'சும்மா கிழி' பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.