சினிமா

நடிகர் சங்கத் தேர்தல் : மோகனின் ஓட்டு, கள்ள ஓட்டானது

webteam

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் மோகனின் வாக்கை வேறொருவர் பதிவு செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் வாக்களிப்பதற்காக நடிகர் மோகன் வாக்கு மையத்திற்கு வந்தார். அப்போது, அவரின் ஓட்டை வேறொரு நபர் ஏற்கனவே பதிவு செய்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபனைச் சந்தித்த மோகன், சம்பவம் குறித்து அவரிடம் முறையிட்டார். 

மோகனிடம் இருந்த ஆவணங்களைச் சரிபார்த்த அதிகாரி, அவரை வாக்களிக்க அனுமதித்தார். ஆனால், மோகனின் வாக்குச்சீட்டை பெற்றுக் கொண்ட அவர், அதனை வாக்குப்பெட்டிக்குள் போடவில்லை. கடந்த தேர்தலிலும் நடிகர் மோகனுக்கு பதில் வேறொரு நபர் ஓட்டு பதிவு செய்த‌து நிகழ்ந்தது. இதுதொடர்பாக, புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த நடிகர் மோகன், இந்தச் சம்பவம் தொடர்ச்சியாக நடப்பது எப்படி என்று தெரியவில்லை என‌க் கேள்வி எழுப்பினார்.