தனக்கு எட்டு வயது இருக்கும்போது ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக ஒரு கிரிக்கெட் வீரரிடம் அவமானப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசியுள்ளார் நடிகர் மாதவன்.
“ அந்த கிரிக்கெட் வீரர் வந்திருக்கிறார் என்றதும் மிகவும் உற்சாகத்துடன் இருந்தோம். அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக முண்டியடித்துக்கொண்டு நண்பர்களுடன் சென்றேன். அவர் யாருடனோ பேசிக்கொண்டே 50 பேருக்கு ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தார். ஆனால் கையெழுத்து போட்டுவிட்டு யாருடைய முகத்தையும் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. அந்த சம்பவம் எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது” என்று தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். தான் இன்று பிரபலமாக இருந்தாலும் யார் ஆட்டோகிராஃப் கேட்டாலும் அவர்களும் கண்களை பார்த்தபடியேதான் கையெழுத்திடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் நடந்த அந்த மோசமான சம்பவம் தன்னை மிகவும் பாதித்ததாக தெரிவித்த மாதவன், இந்த சம்பவம்தான் தனக்கு பணிவையும், தலைவணங்கும் தன்மையையும் கற்றுக்கொடுத்ததாகவும் சொல்கிறார். இதனால்தான் தனது ரசிகர்கள் ஒவ்வொருவரையும் கண்ணியத்துடன் நடத்துவதாகவும் கூறியுள்ளார்.