சினிமா

”களைப்பாக இருக்கிறது Pls excuse me” : ஆதித்த கரிகாலனின் அழைப்பை மறுத்த வந்தியத்தேவன்!

JananiGovindhan

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று. செப்டம்பர் 30ம் தேதி படம் வெளியாக இருப்பதால் படக்குழு தற்போது புரொமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது.

அண்மையில் சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி இருக்கையில், பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள நடிகர் விக்ரம் நேற்று ட்விட்டரில் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வரவிருப்பதாக பதிவிட்டிருந்தார்.

அதில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” எனக் குறிப்பிட்ட விக்ரம், வந்தியத் தேவனான கார்த்தி, அருண்மொழி வர்மான ஜெயம் ரவி, குந்தவையான த்ரிஷா ஆகியோரையும் டேக் செய்திருந்தார் விக்ரம்.

இந்த பதிவுக்கு வந்தியத்தேவனான கார்த்தி ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார். அதில், “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me.” எனக் குறிப்பிட்டுள்ளார். கார்த்தியின் இந்த பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இதனிடையே படத்தின் புரோமோஷனை தீவிரப்படுத்தும் நோக்கில் விக்ரம் தன்னுடைய பெயரை ட்விட்டரில் ஆதித்த கரிகாலன் என்றும், த்ரிஷா குந்தவை என்றும் மாற்றியிருக்கிறார்கள்.