சினிமா

தங்கர் பச்சான் படத்தில் இணையும் ஜி.வி பிரகாஷ் - கெளதம் மேனன் - யோகிபாபு!

sharpana

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கும் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை ஹீரோவாக அறிமுகமாக்கி 'டக்கு முக்கு டிக்கு தாளம்' படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக, ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில், முதன் முறையாக தங்கர் பச்சானுடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார். அவரது இசையில் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன' உருவாகவுள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தை, வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

ஜூலை மாதம் 25 முதல் இரு கட்டங்களாக படப்பிடிப்புகள் தொடங்குகின்றன. ஜி.வி பிரகாஷ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பிறர் அறியாத பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டு குற்ற உணர்வில் நிம்மதி இழந்து மன்னிப்புத்தேடி அலைபவனின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒன்றை எழுதி முடித்து வைரமுத்து ட்விட்டரில்  "தங்கர்பச்சான் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' பாட்டெழுதும்போதே சொல்லோடு கசிந்தது கண்ணீர். விழுமியங்கள் மாறிப்போன சமூகத்திற்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை.. கண்களாவது இருக்குமா?” என அழுத்தமான மன உணர்வுகளை பதிவிட்டுள்ளார்.வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் வீரசக்தி இப்படம் குறித்து, "மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. இக்கதையை கேட்ட மாத்திரத்திலேயே கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அடுத்த நொடியே படத்தை தயாரிக்க முடிவெடுத்துவிட்டேன். இது தங்கர் பச்சானின் அழுத்தமான மற்றொரு படைப்பு. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இது இருக்கும்” என்று சொல்லியுள்ளார்.