சினிமா

ஒரே மேடையில் அமர மறுப்பதா?: ’தெறி’ நடிகரிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குநர்!

ஒரே மேடையில் அமர மறுப்பதா?: ’தெறி’ நடிகரிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குநர்!

webteam

மூன்றாம் தர நடிகர் என்று கூறி அவருடன் ஒரே மேடையில் அமர மறுத்த, திரைப்பட இயக்குநர் மன்னிப்புக் கேட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் பினீஷ் பாஸ்டின். இவர் ’ஆக்‌ஷன் ஹீரோ பைஜூ’, ’டபுள் பேரல்’, ’குட்டமாக்கான்’, ’கொலுமிட்டாயி’ உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் விஜய்-யின் ’தெறி’ படத்திலும் நடித்துள்ளார். 

பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 31-ஆம் தேதி நடந்த விழாவுக்கு இவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தனர். இந்த விழாவுக்கு மலையாள இயக்குநர் அனில் ராதாகிருஷ்ண மேனனும் அழைக்கப்பட்டிருந்தார். இவர் ’நார்த் 24 காதம்’ என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவர்.

மாலை 6 மணிக்கு விழா தொடங்க இருந்தது. அதற்கு முன்னாக பினேஷின் ஓட்டல் அறைக்குச் சென்ற மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மாணவர்கள் சிறிது நேரம் தாமதமாக நீங்கள் கிளம்பி வாருங்கள் என்று தெரிவித்தனர். ஏன் என்று விசாரித்தார் பினேஷ். அப்போது ’மற்றொரு சிறப்பு அழைப்பாளராக, இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் வந்திருக்கிறார், அவர் உங்களுடன் ஒரே மேடையில் அமர மறுக்கிறார். அதனால் அவர் சென்ற பின் நீங்கள் வாருங்கள்’ என்று தெரிவித்தனர். 

கோபமடைந்த பினேஷ், அவர்கள் சொன்னதை ஏற்காமல் குறிப்பிட்ட நேரத்தில் மேடைக்குப் புறப்பட்டார். அப்போது மேடையில் இயக்குநர் அனில் பேசிக்கொண்டிருந்தார். அதனால் போக வேண்டாம் என்று கல்லூரி பேராசிரியர் ஒருவர் அவரைத் தடுத்தார். அதோடு, மேடைக்குச் சென்றால் போலீசை அழைப்பேன் என்றும் எச்சரித்து கையைப் பிடித்து இழுத்தார். ஆனால் அதைக் கேட்காமல் மேடைக்குச் சென்ற பினேஷ், அங்கு போடப்பட்டிருந்த சேர்களுக்கு எதிரே தரையில் அமர்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுபற்றி பினேஷ் விளக்கும்போது, ‘நான் கட்டிடத் தொழிலாளியாக இருந்து நடிகன் ஆனவன். மூன்றாம் தர நடிகர் என்றும் தனது படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு அலைந்தவர் என்பதால் என்னுடன் அமர மாட்டார் என்றும் இயக்குநர் அனில் ராதாகிருஷ்ண மேனன் கூறியிருக்கிறார். எனது பெயருக்கு பின்னால் ’மேனன்’ இல்லை. நான் தேசிய விருது எதுவும் வாங்கவில்லை. ஆனால் நானும் மனிதன் தான். மனசு தாங்காமல் தரையில் அமர்ந்து எனது எதிர்ப்பைத் தெரிவித்தேன்’ என்றார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதில் பினேஷுக்கு ஆதரவாக ஏராளமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சையை அடுத்து, இயக்குநர் அனில் ராதாகிருஷ்ண மேனன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.