சினிமா

’’தனி இசை பாடல்களில் நடிக்கும்பொழுது ஆரம்பத்தில் கேலி செய்தனர்’’ - நடிகர் அஷ்வின்குமார்

Sinekadhara

தனி இசை பாடல்களில் நடிக்கும்பொழுது ஆரம்ப காலகட்டத்தில் தன்னை பலரும் கேலி செய்ததாக நடிகர் அஷ்வின்குமார் தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற சமையல் நிகழ்ச்சிமூலம் பிரபலமானவர் அஷ்வின்குமார். இவர் தற்போது தனி இசை பாடல்களிலும், ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான 'யாத்தி யாத்தி' என்ற தனி இசை பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக யூடியூபில் மட்டும் வெளியான இந்தப் பாடல் ஐந்து நாட்களில் 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஷ்வின் குமார், ஆரம்பத்தில் தனி இசைப் பாடல் வீடியோவில் நடித்ததற்கு தன்னை பலரும் கேலி செய்தனர் என்று தெரிவித்தார். ஆனால் தற்போது தனி இசை பாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதை பார்க்கும்பொழுது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும், தனது வெற்றிக்கு நண்பர்கள் பலரும் உதவியதாகவும், அதனால்தான் இப்போது இந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். தனக்கு நல்ல கதை அமையும்வரை, தனி இசைப் பாடல்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.