சினிமா

ஏழைக் குழந்தைகளின் புகைப்படங்களை காலண்டராக அச்சிட்டு சந்தோஷப்படுத்திய நடிகர் ஆதி!

sharpana

தமிழில் ’மிருகம்’, ’ஈரம்’, ’அரவான்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து பாராட்டுகளை குவித்த நடிகர் ஆதி, சமூக சேவைகள் மூலமாகவும் பாராட்டுகளைக் குவித்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த குடிசைப்பகுதி ஏழைக் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த ஆடைகளை வாங்கிக் கொடுத்ததோடு அவர்களின் புகைப்படங்களையே காலண்டராக அச்சிட்டு குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் நடிகர் ஆதி.

குடிசை பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதற்காக செயல்பட்டுவரும் ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டு நிறுவனத்திற்கு நடிகர் ஆதி ஆலோசகராக உள்ளார்.


இந்த தொண்டு நிறுவனம் மூலம் நடிகர் ஆதி சமீபத்தில், குடிசைப்பகுதி குழந்தைகளின் அசாத்திய திறமை கொண்ட ஆறு வயது முதல் 9வயது வரை உள்ள 6 குழந்தைகளை தேர்வு செய்துள்ளார். குழந்தைகள் உடுத்த ஆசைப்படும் மிக உயர்ந்த ஆடை எது என்று கேட்டு அவர்கள் விருப்பப்படி அந்த ஆடைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதை அப்படியே விட்டு விடாமல்,  புகைப்படக்காரரைக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை இந்த ஆண்டு காலண்டராக வடிவமைத்து, அந்த காலண்டரை அவர்களுக்கே பரிசாக நடிகர் ஆதி வழங்கியுள்ளார்.

அதை பார்த்த குழந்தைகளின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதன்பின் அந்த ஆடைகளையும் அவர்களுக்கே பரிசாக வழங்கினார் ஆதி. இதனால், நடிகர் ஆதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.