சினிமா

‘அச்சமுண்டு அச்சமுண்டு’ மூலம் கவனம் ஈர்த்த அருண் வைத்தியநாதனின் அடுத்த பட அறிவிப்பு

sharpana

’அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் வைத்தியநாதன் மீண்டும் குழந்தைகளுக்கான படத்தை இயக்கவிருக்கிறார்.

பிரசன்னா-சினேகா நடித்த ’அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் ’நிபுணன்’, மோகன்லால் நடித்த ’பெருச்சாழி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், விஜய் சேதுபதியின் ’சீதக்காதி’ படத்தின் இணை தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன், தனது புதிய படத்தை அறிவித்திருக்கிறார். இந்தப் படமும் குழந்தைகளுக்கான படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே பெண் குழந்தைகள் மீது பாலியல் கொடூரங்கள் நிகழ்த்தப்படுவதை அப்பட்டமாகக் காட்டியதோடு சமூகத்திற்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வூட்டியது. இப்படத்திற்காக, பெரிதும் பாராட்டப்பட்டார் அருண் வைத்தியநாதன்.

தற்போது இயக்கவுள்ள புதிய படம் குறித்து அருண் வைத்தியநாதன் பேசும்போது,

"குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும். அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்த படம். குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இது அனைத்து வயதினரையும் கவரும். கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார்கள். ஓடிடி தளங்களிலும் கூட குழந்தைகளை கவரும் வகையில் படங்கள் வரவில்லை.

இந்தப் படத்தின் கதையை நான் கொரோனாவுக்கு முன்னரே எழுதி விட்டாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளோம். நான்கு குழந்தைகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதன் கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்த குழந்தையும் இதை தொடர்பு படுத்திக்கொள்ள முடியும்” என்று அக்கறையுடன் கூறும் அருண் வைத்தியநாதன் தனது யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.