சினிமா

“அதிதி மேனனை யாரோ மூளைச் சலவை செய்துள்ளனர்” - நடிகர் அபி சரவணன்

webteam

நடிகை அதிதி மேனனை மூளைச் சலவை செய்து தனக்கெதிராக புகார் கொடுக்க வைத்திருப்பதாக நடிகர் அபி சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘பட்டதாரி’. இந்தப் படத்தில் இணைந்து நடித்த அபி சரவணன் மற்றும் அதிதி மேனன் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, நடிகை அதிதி மேனன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக, நடிகர் அபி சரவணன் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதற்கு மறுப்பு தெரிவித்த அதிதி மேனன், இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தன்னைப் பதிவுத் திருமணம் செய்ததைப் போல போலி ஆவணங்கள் தயாரித்ததாக நடிகர் அபி சரவணன் மீது, புகார் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த அபி சரவணன், தானும், நடிகை அதிதி மேனனும் பதிவுத் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என உறுதிபடத் தெரிவித்தார். அதற்கான புகைப்படங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் அவர் வெளியிட்டார். 

தற்போது அதிதியுடன் இருக்கும் ஆண் நண்பர் அவரை மூளைச் சலவை செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள அபி சரவணன், இதுதொடர்பாக தாம் அளித்த புகாரைத் திரும்பப் பெற அவர் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். பிரச்னைகளை மறந்து மனம் மாறி திரும்பி வந்தால் அதிதி மேனனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அபி சரவணன் தெரிவித்துள்ளார்.