சினிமா

”என் மகளை கேலி செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: அப்படி தைரியம் இருந்தால்”- அபிஷேக் பச்சன்

sharpana

”என் மகளை கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி கேலி செய்ய தைரியம் இருந்தால் என் முகத்திற்கு நேராக செய்து பார்க்கட்டும்” என்று பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், ஆராத்யாவை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பாலிவுட்டின் ரியல் லைஃப் ஜோடியான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதிகளின் ஒரே மகளான ஆராத்யா பச்சன் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி 10 வயது பிறந்தநாளைக் கொண்டாடினார். மகளின் பத்தாவது பிரந்தநாளை மாலத்தீவில் சிறப்பாக கொண்டாடியது இத்தம்பதி. அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் உற்சாகமுடன் ’எனது ஏஞ்சல்’ என்று பதிவிட்டு புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் அபிஷேக் பச்சன். அந்த புகைப்படங்களுக்கு வாழ்த்துகள் குவிந்த நிலையில் விமர்சனங்களும் வந்தன. அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து அபிஷேக் பச்சன் தற்போது காட்டமாக பதிலளித்துள்ளார். அபிஷேக் பச்சன் நடிப்பில் இன்று ‘பாப் பிஸ்வாஸ்’ படம் வெளியாகியுள்ளது. படத்தில் உடல் குண்டாக ஏற்றி கவனம் ஈர்த்துள்ளார்.

படத்தின் வெளியீட்டையொட்டி பேட்டியளித்த அபிஷேக் பச்சனிடம் ஆராத்யாவை விமர்சனம் செய்தது குறித்து கேட்டபோது, ”என் மகளை கேலி செய்வதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அது முற்றிலும் ஏற்றக்கொள்ள முடியாதது. சினிமா துறையில் பிரபலமாக இருப்பதால் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதேபோல, என் நடிப்பில் குறை சொன்னால் அதனை சரி செய்துகொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், என் மகளை கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி கேலி செய்ய தைரியம் இருந்தால் என் முகத்திற்கு நேராக செய்து பார்க்கட்டும்” என்று காட்டமுடன் கூறியிருக்கிறார்.