சினிமா

“ஆர்யா சாயிஷா திருமணம் ஒரு வதந்தி” - ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்நதி

webteam

நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் திருமணம் செய்து கொள்ள போவதாக வெளியான செய்தி வெறும் வதந்தி என ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் போட்டியாளரான அபர்நதி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் மார்ச் மாதம் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் ஆர்யாவும் சாயிஷாவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.

சாயிஷா, பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார்-சாயிரா பானு தம்பதியின் பேத்தி. இந்தியில் அஜய்தேவ்கனுடன் ‘ஷிவாய்’ படத்தில் நடித்த சாயிஷா, பிறகு ஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’, விஜய்சேதுபதியின் ‘ஜுங்கா’ படங்களில் நடித்தார். ‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்யா நடத்திய ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் அபர்நதி என்ற பெண் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அப்போது இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 5 போட்டியாளர்களில் இவரும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது அபர்நதி வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அபர்நதி, ஆர்யா-சாயிஷா திருமண செய்தி 99% வதந்தி என்றும் ஆர்யா, சாயிஷா இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இதுகுறித்த செய்தியை வெளியிட்டால் மட்டுமே இதனை நம்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.