ராஜஸ்தானின் ஸ்ரீகங்கானகரில் பிறந்த ரவீந்திர கௌசிக், உண்மையான இந்திய உளவுத்துறை ஆளுமைகளால், ‘கருப்புப் புலி’என அழைக்கப்படுகிறார். கல்லூரிக் காலத்தில் நாடகத்தில் சேர்ந்து, தனது திறமையை வெளிப்படுத்தியபோது, அதுவே அவரை ஒரு நிஜமான துரந்தராக மாற்றியது.
'துரந்தர்' முதல் பாகம் ஏற்கெனவே வசூலில் சாதனை படைத்த நிலையில், துரந்தர் இரண்டாம் பாகமான தி ரிவென்ஞ்சும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் முதல் நாள் வசூலே, இந்திய படங்களின் முந்தைய சாதனைகளை முறியடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாத குழுவுக்குச் செல்லும் ஓர் இந்திய உளவாளியின் சாகசங்களே இப்படங்களில் உண்மையும் கற்பனையும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்படம் தொடர்பாக பல்வேறு செய்திகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. முன்னதாக, ரன்வீர் சிங்கின் உண்மையிலேயே பாகிஸ்தானைச் சேர்ந்தவராக என இணையத்தில் தேடுதல் வேட்டை நடந்தது. இந்த நிலையில், இந்தியாவின் உண்மையான துரந்தரான ரவீந்திர கௌசிக் பற்றி செய்திகள் வெளியாகி வருகின்றன.
யார் இவர்? அவர் எப்படி பாகிஸ்தானுக்குள் சென்றார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். ராஜஸ்தானின் ஸ்ரீகங்கானகரில் பிறந்த ரவீந்திர கௌசிக், உண்மையான இந்திய உளவுத்துறை ஆளுமைகளால், ‘கருப்புப் புலி’என அழைக்கப்படுகிறார். கல்லூரிக் காலத்தில் நாடகத்தில் சேர்ந்து, தனது திறமையை வெளிப்படுத்தியபோது, அதுவே அவரை ஒரு நிஜமான துரந்தராக மாற்றியது. 1973ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஒரு தேசிய அளவிலான நாடகப் போட்டியின்போது, ரவீந்திர கௌஷிக் விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஓர் இந்திய சிப்பாயின் பாத்திரத்தில் தனி ஒருவராக நடித்தார். அவரது நிதானமும் மொழிப் புலமையும் RAW-வின் திறமையாளர்களைக் கண்டறிபவர்களின் கவனத்தை ஈர்த்தன.
அதற்குப் பின் அவர் RAW அமைப்பினரால் தேர்வு செய்யப்பட்டு டெல்லியில் இரண்டு ஆண்டுகள் கடுமையான பயிற்சி பெற்றார். அப்போது அவர் நபி அகமது ஷாகிர் என அடையாளப்படுத்தப்பட்டார். அவர் முஸ்லிம் நபராக உருமாறுவதை உறுதி செய்வதற்காக, அவருக்கு இஸ்லாமிய பாடங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட்டன. மேலும் அவர் செல்லவிருக்கும் இடத்தின் புவியியலும் கற்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய 23ஆவது வயதில், அதாவது 1975ஆம் ஆண்டு கெளஷிக் பாகிஸ்தான் எல்லையைக் கடந்தார். அங்கு கராச்சி பல்கலையில் சேர்ந்து பட்டம் பெற்றார். இறுதியில், அவர் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்து, காலப்போக்கில் மேஜர் பதவிக்கும் உயர்ந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் அவர் பாகிஸ்தான் படைகளின் நடமாட்டம், அறிக்கைகள் மற்றும் அந்நாட்டின் அணுசக்தித் திட்டம் குறித்த முக்கிய உளவுத் தகவல்களை இந்தியாவுக்கு வழங்கினார்.
குறிப்பாக, 1979 முதல் 1983 வரை கௌஷிக் இந்தியாவிற்கு உயர்மட்ட உளவுத் தகவல்களை வழங்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அவருடைய இந்த பங்களிப்பை உணர்ந்த மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, அவருக்கு 'கருப்புப் புலி' என்ற பட்டத்தை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இப்படி, இந்தியாவிற்கு விசுவாசமாக இருந்த அவர், அமானத் என்ற பாகிஸ்தானியப் பெண்ணையும் மணந்து ஒரு குழந்தையுடன் அங்கேயே வாழ்ந்து வந்தார். காலங்கள் உருண்டோடின. இறுதியில் பாகிஸ்தானிய எதிர் உளவுத்துறையால் கெளசிக் காட்டிக்கொடுக்கப்பட்டார். பின்னர், அதன் விளைவால் கைது செய்யப்பட்டு சிறையில் சொல்ல முடியாத அளவுக்கு சித்திரவதைகளை அனுபவித்தார். 1985ஆம் ஆண்டு கௌஷிக்கிற்கு பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது; பின்னர், அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கொடுமைகளாலும், உடல் பாதிப்புகளாலும் முற்றிலும் பாதிக்கப்பட்ட கெளசிக், 2001, நவம்பர் 21 அன்று மியான்வாலி மத்திய சிறையில் காலமானார். அவரது சடலம், அந்தச் சிறைக்குப் பின்புறத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. கற்பனைக்கு மத்தியில் துரந்தர் படம் வெற்றிநடை போடும் வேளையில், உண்மையான இந்திய துரந்தரின் மரணமும் இப்போது அனைவராலும் நினைவு கொள்ளப்படுகிறது.