a.r.rahman
a.r.rahman pt web
சினிமா

”எனக்கு ஒவ்வொரு ரசிகரும் முக்கியம்“- இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த பிரச்னைகள் குறித்து ரஹ்மான் விளக்கம்

Angeshwar G

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. கான்செர்ட்டுக்கு வந்த ரசிகர்கள் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து சமூகவலைதளங்களில் தங்களது கருத்துககளை பகிர்ந்து வந்தனர்.

இசைக்கச்சேரியை ஒருங்கிணைத்த நிறுவனமும் இது குறித்து தனது மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து ரஹ்மானும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவர் கூறுகையில், “டியர் சென்னை மக்களே, டிக்கெட் வாங்கியும் எதிர்பாராத சூழ்நிலையால் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வரமுடியாதவர்கள் நீங்க வாங்கிய டிக்கெட் நகலை arr4chennai@btos.in என்ற மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள். உடன் உங்களது குறைகளையும் கூறினால் எங்கள் குழு தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்துள்ளார்

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரியில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார். தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒரு இசையமைப்பாளராக, ஒரு அற்புதமான நிகழ்ச்சியை வழங்குவதே எனது வேலை, மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததால் பாதுகாப்பு முதன்மையான பிரச்சினையாக இருந்தது. நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை, ஆனால் நகரம் விரிவடைகிறது என்பதை நாம் உணர வேண்டும், மேலும் இசை மற்றும் கலை நுகர்வு ஆர்வமும் விரிவடைகிறது.

சாதகமற்ற வானிலை காரணமாக ஆகஸ்டில் இருந்து செப்டம்பருக்கு கான்சர்ட் மாற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் சுமார் 46 ஆயிரம் இருக்கைகளை அமைத்திருந்தனர். சில பிரிவுகளில் மக்கள் ஒரு பகுதியில் மட்டுமே அமர்ந்திருந்தனர். மறுபுறத்திற்கு செல்லவில்லை. பணியில் இருந்த காவல்துறையினர் இதனைக் கண்டு அரங்கம் நிரம்பிவிட்டதாக நினைத்து கதவை அடைத்துவிட்டனர். அச்சமயத்தில் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.

Marakkumaa Nenjam

கடந்த ஆண்டு அமெரிக்காவில் 20 நிகழ்ச்சிகளை நடத்தினோம். அனைத்தும் சுமூகமாகவும் பிரச்சனைகளின்றியும் நடந்தது. மறக்குமா நெஞ்சம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரு நிகழ்ச்சி. அது சிறப்பானது தான், ஆனால் மக்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது அனைத்திலும் முக்கியமானது.

சர்வதேச அளவில் நமக்கு கட்டமைப்பு தேவைப்படுகிறது. இது எனக்கு ஒரு பாடம். உலகளவில் பல கலை கூட்டங்களுக்கு நான் சென்றுள்ளேன். அதை பார்க்கும் போது, இது ஏன் சென்னையில் உள்ள நம் மக்களுக்கு மறுக்கப்படுகிறது? அவர்கள் இதற்கு மேலானவற்றிற்கு தகுதியானவர்கள் என தோன்றும்.

ஆயிரக்கணக்கான மக்கள் அரங்கினுள் இருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியாக இசையை கேட்டனர். சென்னை மக்களின் ஆற்றலும் அன்பும் மகத்தானது; சில நேரங்களில், எதையாவது நீங்கள் அதிகமாக நேசிக்கும்போது, ​​அது உங்களிடமிருந்து விலகிச் செல்கிறது. அதுதான் இங்கு நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

சென்னையை கலைத் தலைநகராக மாற்றுவதில் நான் லட்சியமாக இருக்கிறேன், நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை, ஏனெனில் மக்கள் ஒருங்கிணைப்பாளர்களுக்காக கச்சேரிக்கு வரவில்லை. எனக்காக வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

மறக்குமா நெஞ்சம்

இதை நாங்கள் சரிசெய்வோம். ஏனெனில் ஒவ்வொருவரும் எனக்கு முக்கியம்.

நான் என் மகனிடம் இது குறித்து சொல்லிக்கொண்டிருந்தேன், நாம் பார்ட்னர்ஷிப்பில் (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்) எதையாவது மேற்கொள்ளும் போது மக்கள் அந்த பார்ட்னர்ஷிப்பை பார்க்க மாட்டார்கள். அவர்கள் நம்மைத்தான் பார்ப்பார்கள். அங்கு பார்ட்னர்ஷிப் மறைந்துபோகும், நாம் தான் எஞ்சி இருப்போம். கான்சர்ட்டுக்கான அம்சங்களையும் தாண்டி சிந்திக்க வேண்டும். இனி இப்படி நடக்கவிட மாட்டோம் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.