சினிமா

கேரளாவில் நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு !

webteam

சர்காரில் புகைப்பிடிக்கும் காட்சி போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி விஜய் மீது  கேரளாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டது. 

இந்நிலையில் ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தியேட்டர் முன் இருந்த விஜய்யின் பேனர்களை கிழித்தனர். போராட்டம் காரணமாக பல திரையரங்குகளில் ‘சர்கார்’ காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சர்ச்சைக்குரியதாக கூறப்படும் காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புதல் அளித்தனர். அதன்படி ’சர்கார்’ திரைப்படத்தில் இருந்து மிக்ஸி, க்ரைண்டர், ஃபேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சி, மற்றும் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதை ஆடியோ கட் செய்தும்‘சர்கார்’ படம் மறு தணிக்கை செய்து வெளியிடப்பட்டது. அதன்படி சர்கார் சர்ச்சை ஓய்ந்த நிலையில் சென்னையில் சர்கார் படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.

இந்நிலையில் சர்கார் படத்திற்கு கேரளாவில் புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. சர்கார் படத்தில் இடம்பிடித்திருக்கும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகக்கூறி திருச்சூர் சுகாதாரத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. சர்கார் நாயகன் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,