கீர்த்தன் நடகௌடா இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் ‘418’. சூர்யா ராஜ், சரண் லக்கராஜு மற்றும் பிரீத்தி பகடலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை மைத்ரி நிறுவனம் தயாரித்துள்ளது. ‘KGF’, ‘Salaar’ படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இப்படத்தை வழங்குகிறார். ஹாரர் ஜானரில் உருவான ‘418’ படம் முதலில் ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். ஆனால் CBFC சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.
இதற்குக் காரணமாக, “படத்தில் அதிகப்படியான ஹாரர் அம்சங்கள்” இருப்பதாக சென்சார் தரப்பில் ஆட்சேபனை எழுந்ததாக சொல்லப்பட்டது. இதனால் படக்குழு ரிவைசிங் கமிட்டியை அணுகியது. ’ஹாரர்’ படத்திலேயே ஹாரர் காட்சிகள் அதிகம் இருப்பதாகக் கூறி சென்சார் பிரச்னை ஏற்பட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்தது. சமூக வலைதளங்களில், “ஹாரர் படத்தில் ஹாரர் இருக்கக்கூடாதா?” என்ற வகையிலான கருத்துகளும் வெளியாகின. சிலர் படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கி வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
படத்தின் சில காட்சிகள் வழக்கமான பேய் படங்களைவிட மிகவும் தீவிரமாகவும் பார்வையாளர்களை அச்சப்படுத்தும் வகையிலும் இருப்பதாக சென்சார் தரப்பில் ஆட்சேபனை எழுந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனாலும் அந்தக் காட்சிகளில் மாற்றம் செய்யாமல் படத்தின் தீவிரத்தைக் காப்பாற்ற படக்குழு முயற்சி செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் சூழலில் செப்டம்பர் 10ஆம் தேதி ‘418’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து படம் செப்டம்பர் 18 திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டனவா என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நகைச்சுவை கலந்த ஹாரர் படங்களுக்கு மத்தியில், ‘418’ ஒரு சீரியஸ் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. ஒரு ஹாரர் படத்தின் ஹாரர் காட்சிகளே சென்சார் பிரச்னைக்குக் காரணமாகி, அதன் பிறகு ‘A’ சான்றிதழுடன் வெளியாகும் சூழல் உருவாகியிருப்பது ‘418’ படத்துக்கு வித்தியாசமான ஹைப் கொடுத்துள்ளது. உண்மையிலேயே படம் எந்த அளவுக்கு பயமுறுத்தப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஹாரர் ரசிகர்கள் செப்டம்பர் 18-ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.