2018
2018 pt
சினிமா

ஆஸ்கர் விருதுப்பட்டியலில் இருந்து வெளியேறிய ‘2018’.. "அடுத்த கனவு பயணத்தை தொடங்குகிறேன்" - இயக்குநர்

யுவபுருஷ்

உலக அளவில் சிறந்த நடிகர், நடிகை, கலைஞர்கள், படங்கள் என்று சிறந்த படைப்புகளை கவுரவிக்கும் விதமாக ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு வெளியான மலையாளப்படமான ‘2018’ ஆஸ்கர் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. சிறந்த வெளிநாட்டுப்படங்களுக்கான பட்டியலில் படம் பரிந்துரைக்கப்பட்டது. ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம், ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது ரசிகர்களை குஷியாக்கியது.

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் நிலையில், விருதுக்கான கடைசி பட்டியலை விருதுக்குழு அறிவித்துள்ளது. சிறந்த வெளிநாட்டுப்படங்களுக்கான பரிந்துரையில் 88 படங்கள் இடம்பெற்ற நிலையில், கடைசி 15 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் பலரும் எதிர்பார்த்த 2018 படம் இடம்பெறவில்லை. இந்த தகவல் ரசிகரக்ளுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

ஆஸ்கர் விருது பட்டியலில் படம் இடம்பெறாத தகவலை இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப்பே இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஆஸ்கர் விருதுக்கான கடைசி 15 படங்கள் அடங்கிய பட்டியலில் 2018 படம் இடம்பெறவில்லை. உங்களை ஏமாற்றியதற்காக எனது ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியாவை பிரிதிநிதிப்படுத்தியது ஒரு கனவு பயணம்தான்.

இதை எனது வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன். இந்த அற்புதமான பயணத்திற்காக என்னை தேர்வு செய்த கடவுளுக்கு நன்றி. இந்த பயணத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. விருது பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். அடுத்த கனவுக்கான பயணம் இன்று முதல் தொடங்குகிறது. ஆஸ்கர் விருதுகள் காத்திருக்கின்றன. நானும் கலந்துகொள்ள தயாராக இருக்கிறேன்.. சந்திப்போம் ஆஸ்கர்” என்று பதிவிட்டுள்ளார்.