சினிமா

ராஜமுந்திரியில் ‘விசுவாசம்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

webteam

அஜித் ‘விசுவாசம்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘விசுவாசம்’. இவரது இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்து வருகிறார். ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களை அடுத்து இவர் அஜித்தை வைத்து ‘விசுவாசம்’ படத்தை எடுத்து வருகிறார். இந்த நான்கு படங்களின் தலைப்பின் முதல் எழுத்தும் ஆங்கிலத்தில் ‘வி’என வருவதை போல இயக்குநர் திட்டமிட்டு வைத்துள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அங்கே சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுவரை 40 சதவீத படப்பிடிப்பை முழுவதுமாக முடித்திருக்கிறது படக்குழு. 

இந்நிலையில் படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ராஜமுந்திரியில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. முதற்கட்ட படப்பிடிப்பையே அங்குதான் ஆரம்பிக்க வேண்டும் என சிவா முடிவு செய்திருந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆகவே திட்டமிட்டபடி ராஜமுந்திரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏர்போர்ட்டில் சிவாவும் அஜித்தும் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இப் படம்‘தீபாவளி ரிலீஸ்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. ஆனால் இடையில் திரைத்துறை வேலை நிறுத்தத்தை கடைப்பிடித்ததால் மொத்த சினிமா துறையும் முடங்கியது. அதனால் திட்டமிட்டபட்டி ‘விசுவாசம்’ வேகம் எடுக்கவில்லை. இந்நிலையில் விஜய்யின் ‘சர்கார்’, சூர்யாவின் ‘என்ஜிகே’ திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. அதனால் அஜித்தின் ‘விசுவாசம்’ வெளியீட்டை பொங்கலுக்கு தள்ளிப் போடலாம் என படக்குழு திட்டமிட்டு வருவதாக செய்தி கசிந்து வருகிறது. ஆனால் இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யவில்லை.