நந்திதாஸ் இயக்கத்தில் நவாஸுதீன் சித்திக் நடிப்பில் வெளியான ‘மண்டோ’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் சாதத் ஹசன் மண்டோவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் இது.
20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த உருது எழுத்தாளராக கருதப்படுபவர் சாதத் ஹசன் மண்டோ. 22க்கும் அதிகமான சிறுகதை தொகுப்புகளை அவர் எழுதியுள்ளார். அவரது எழுத்துக்களில் இந்திய பாகிஸ்தான் பிரிவினை பின்புலம் அதிகமாக இருக்கும். யாரும் தொட முடியாத இடங்களை தனது எழுத்தில் தொட்டவர் மண்டோ. பிரிட்டிஷ் இந்தியாவின் லுதியானாவில் 1922 இல் பிறந்தவர் சாதத் ஹசன் மண்டோ. 42 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தவர்.
இவரது முதல் சிறுகதையே ஜாலியன் வாலாபாக் படுகொலையை மையமாக கொண்டு எழுதப்பட்டு இருந்தது. மண்டோவின் ஆரம்ப கால எழுத்துக்களில் அப்போதையை இடதுசாரி, சோசலிஸ்ட் கருத்துக்களின் தாக்கம் இருந்தது. பின்னர் மனிதர்களின் மனநிலையை படம் பிடித்து காட்டும் வகையில் கதைகளை எழுதினார். நாடு சுதந்திரம் அடையும் வரை மும்பையில் இருந்த மண்டோ, பின்னர் பாகிஸ்தானின் லாகூருக்கும் இடம்பெயர்ந்தார். பாகிஸ்தான் சென்ற பிறகும் இலக்கியவாதியாக தொடர்ந்து செயல்பட்டார். 1955 ஆம் ஆண்டு தனது 42 ஆவது வயதில் மண்டோ இறந்தார்.
சிறந்த இலக்கியவாதியாக கருதப்படும் சாதத் ஹசன் மண்டோவின் வாழ்க்கை வரலாறு மண்டோ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. நவாஸுதீன் நடிப்பில் உருவான இந்தப் படம் இன்று வெளியானது. இந்தி சினிமாவில் மிகவும் திறமை வாய்ந்த வித்தக நடிகர் என்ற பெயரை பெற்றவர் நவாஸுதீன் சித்திக். நவாஸுதீன் சித்திக் நடிப்பில் ஒரு தங்கம். அவர் தொடுவது எல்லாம் தங்கமாக மாறிவிடும் என்பதை அவர் நடிப்பில் வெளியான படங்கள் கூறும். இன்று வெளியாகியுள்ள மண்டோ படத்திலும் அவர் நடிப்பு தனித்து தெரிகிறது.
மண்டோ படத்தில் நவாஸுதீன் உடன் ரசிகா துகல், தஹிர் ராஜ் பாசின், ஜவேத் அக்தர், ஷஷாங் அரோரா, ரிஷி கபூர், திவ்யா தத், சந்தன் ராய் சன்யாள் உள்ளிட்டோர் நடத்துள்ளனர். அழகி படத்தில் நடித்த நந்திதா தாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.