சினிமா

’கே.ஜி.எஃப்- 2’ இல் முக்கிய கதாபாத்திரத்தில் ‘காலா’ புகழ் ஈஸ்வரி ராவ் ?

Sinekadhara

கன்னட ஸ்டார் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் -1 மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. அதன் தொடர்ச்சியாக பிரசாந்த் நீல் இயக்கும் இரண்டாவது அத்தியாயத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. கொரோனாவால் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களான சஞ்சய் தத் ஆதீரா வேடத்திலும், நடிகை ரவீனா டாண்டன் அரசியல்வாதியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், காலா படத்தில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஈஸ்வரி ராவ், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இவர் கடைசியாக, வைபவ், வெங்கட் பிரபு மற்றும் வாணி போஜனுடன் இணைந்து ஜீ5 -இன் ’அசல் லாக் அப்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளை விசாரிக்கும் ஒரு ஆய்வாளராக தோன்றினார்.

கொரோனாவால் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டபோது, இன்னும் 24 நாட்கள் படபிடிப்பு மீதமுள்ளதாக ஹோம்பலே பிலின்ஸின் படைப்பாக்க நிர்வாக தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்திருந்தார். இப்படத்தில் பெரும்பாலான பகுதி பெங்களூருவுக்கு அருகிலுள்ள கோலார் தங்க சுரங்கத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில சண்டைக் காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் மட்டுமே படமாக்கவேண்டி இருக்கும் நிலையில், யாஷ் மற்றும் சஞ்சய் தத் சண்டையிடும் காட்சிகள் இடம்பெறும். சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்தவுடன் மீதிக் காட்சிகள் படமாக்கப்படும் என்று கூறியுள்ளார்.