நான் நன்றாக இருக்கிறேன் என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
பாலாஜி மோகன் இயக்கி வரும் திரைப்படம் ‘மாரி2’. அதன் படப்பிடிப்பு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். வரலட்சுமி, வித்யா, டோவினோ தாமஸ் என பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘மாரி2’ படப்பிடிப்பில் தனுஷூக்கு அடிபட்டுள்ளது. அவருக்கான சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்ட போது அவரது வலது காலில் அடிபட்டுள்ளது. ஆனால் உடனே அவருக்கு உரிய முறையில் படக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு தனுஷ் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் அவரை நலம் விசாரிக்க ஆரம்பிதுவிட்டனர். இதனை அடுத்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எனது நம்பிக்கைக்குரிய ரசிகர்களே, இது பெரிய விபத்தல்ல; நான் நன்றாக இருக்கிறேன். உங்களின் விசாரிப்புக்கும் பிரார்த்தனைக்கும் எனது நன்றிகள். நான் உங்களை நேசிக்கிறேன். என்னுடைய பலமும் சக்தியும் நீங்கள்தான்” என்று கூறியுள்ளார்.