சினிமா

"தியேட்டர்கள் இருக்கும்வரை மட்டுமே படங்களை இயக்கமுடியும்" - இயக்குநர் ஹலிதா ஷமீம்

webteam

தமிழகத்தில் இன்று... நாளை... என தியேட்டர் திறக்கப்படும் நாள் புதிராகவே இருந்துவருகிறது. தீபாவளியும் நெருங்கிவருகிறது. தற்போது பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்திற்குரிய இயக்குநராக மாறிய ஹலிதா ஷமீம், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் தியேட்டர் லவ் பகுதியில் தியேட்டர் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

"நான் கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்தேன். அதனால் சினிமா உலகத்தால் ஈர்க்கப்படுவதற்கு சில காலம் பிடித்தது. சிறு பிராயத்தில் தியேட்டரில் பார்த்த படங்கள் அவ்வளவாக நினைவில் இல்லை. ஆனால் மணிரத்னம் சார் படங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் அஞ்சலி. அது கரூரில் உள்ள திண்ணப்பா தியேட்டர்.

அஞ்சலி 

அப்போது எனக்கு பேபி ஷாமிலியின் வயதுதான். நான் அவரைப்போல அழுதேன் என்று சொல்வார்கள். என் வீட்டுக்கு அருகிலுள்ள தியேட்டரில் உயிரே படத்தைப் பார்த்தேன். அது எனக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பின்னர் தேவி தியேட்டரில் அலைபாயுதே பார்த்தேன். அதுதான் என்னை சினிமாவுக்கு அழைத்துவந்தது.

ஆல்பட் தியேட்டரில் படையப்பா பார்த்தேன். கில்லி உள்பட விஜய் படங்கள், 7ஜி ரெயின்போ காலனி மற்றும் காதல் உள்ளிட்ட சில படங்களை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசனையான அனுபவம். நான் ரெகுலராக சென்றுவரும் இடமாக தேவி தியேட்டர் இருந்தது. சிலர் என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள். ஓரம் போ படம்தான் நான் வேலை பார்த்த முதல் படம். அங்கு ஒரு காட்சியைப் படம்பிடித்தோம்.

கில்லி 

என் முதல் படம் பூவரசம் பீப்பி வெளியானபோது, தேவி தியேட்டரில் ஒரு வாரம் கூடுதலாக திரையிடுவார்கள் என்று தகவல் சொன்னார்கள். அந்நியன் படம் பார்ப்பதற்காக காலை 7 மணிக்கே சத்யம் தியேட்டரில் டிக்கெட் எடுத்தபோது மக்கள் வித்தியாசமாக என்னைப் பார்த்தார்கள். சென்னையில் உள்ள மல்டிப்ளக்ஸ் தியேட்டரில் பருத்திவீரன் படத்தைப் பார்த்தது மிகவும் ஆச்சரியம் தந்த அனுபவம்.

சில்லுக்கருப்பட்டி 

படம் எப்படி இருக்கும் என்று தெரியாமல் ஒரு எதிர்பார்ப்புடன் வந்து தியேட்டரில் படம் பார்த்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல தியேட்டரில் திருவிழாக் கூட்டம். மீண்டும் அந்தப் படத்தை உதயம் தியேட்டரில் பார்த்தேன். உதவி இயக்குநராக இருந்தபோது, ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து, நான் சரியான துறையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டேன்.
என் சில்லு கருப்பட்டி படத்திற்கு பலோசோ தியேட்டரில் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு காட்சியையும் கைதட்டி ரசித்தார்கள்.

ஹலிதா ஷமீம்

ரசிகர்கள் ஓர் இடத்தில் ஒன்றுகூடி, இருட்டு அறையில் தங்களுடைய உணர்வுகளுடன் சம்பந்தப்படுத்திக்கொள்வதுதான் சினிமாவின் மேஜிக். மக்கள் மொபைல் போன்கள் மற்றும் ஓடிடி தளங்களைப் படம் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் தியேட்டர்கள் தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சிப்படுத்தும். தியேட்டர்கள் இருக்கும்வரை மட்டும்தான் என்னால் படங்களை இயக்கமுடியும்" என்று நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பேசுகிறார் ஹலிதா ஷமீம்.