சினிமா

திரையரங்குகளில் 3 வாரங்களைக் கடந்த ’அயோத்தி’.. கொண்டாடிய படக்குழு! ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

webteam

திரையரங்குகளில் மூன்று வாரங்களைக் கடந்து வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கும் ’அயோத்தி’ படத்தின் வெற்றியை, அப்படக் குழு கேக் வெட்டி கொண்டாடியது.

அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நடித்த படம் ‘அயோத்தி’. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ரவீந்திரன் தயாரித்திருந்தார்.

கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், 3 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதத்தையும் மதநல்லிணக்கத்தையும் பேசும் இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இந்தப் படத்தை பாராட்டி விமர்சனங்களை எழுதி வருகிறார்கள். சிலர் நாங்கள் டிக்கெட் போடுகிறோம் படத்தை பாருங்கள் என சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பார்க்க முடிந்தது. இதனால், திரையரங்குகளில் கணிசமான அளவிற்கு வருகை இருந்து கொண்டே இருப்பதால், வசூல் ரீதியாகவும் படம் வெற்றியை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழு சார்பில் இன்று(மார்ச்.19) கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் சசிகுமார், தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குநர் மந்திரமூர்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். தொடர்ந்து படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு நடிகர் சசிகுமார் தங்க செயினை பரிசளித்தார்.

இந்த நிலையில், அயோத்தி திரைப்படம் வரும் மார்ச் 31ஆம் தேதி, ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க மறுபுறம், இந்தப் படம், இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகவும் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க இருப்பதாகவும் இரண்டு மொழிக்கும் ‘அயோத்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாக இருக்கிறது.