நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம் ஜோத்பூரில் நவம்பர் மாதம் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழில், விஜய்யின் ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் ஜூலை மாதம் முடிந்துவிட்டது.
நிச்சயதார்த்ததுக்கு லண்டனில் உள்ள பிரபலமான நகைக்கடையில் நிக், 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் மோதிரம் வாங்கியதாகக் கூறப் பட்டது. இவர்களது நிச்சயதார்த்த விருந்து மும்பை ஜுஹூவில் உள்ள பிரியங்கா சோப்ராவின் வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர் கள் மட்டுமே கலந்துகொண்டனர். அங்கு சிறப்பு பூஜையும் நடந்தப்பட்டது.
இந்நிலையில் இவர்கள் திருமணம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இவர்கள் ஜோத்பூரில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் பிரியங்காவும் நிக் ஜோனாஸும் ஜோத்பூர் சென்றனர். அவர்கள் ஜோத்பூர் சென்றதை பிரியங்கா சோப்ராவின் சகோதரர், சித்தார்த் சோப்ரா உறுதி செய்துள்ளார். திருமணம் செய்துகொள்ளும் இடத்தை பார்ப்பதற்காகவே அவர்கள் இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.