சினிமா

இயக்குனர் மோசமாக நடந்துகொண்டாரா? தமன்னா மறுப்பு

webteam

இந்திப் பட இயக்குனர் சஜித் கான் தன்னிடம் மோசமாக நடக்கவில்லை என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

'மீ டூ' இயக்கம் மூலம், பல்வேறு நடிகைகள் உட்பட பல பெண்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை குறித்து புகார்களை கூறிவந்தனர். இந்தி சினிமா இயக்குனரும், நடிகருமான சஜித் கான் மீது நடிகைகள் ராச்சல், உதவி இயக்குனர் சலோனி சோப்ரா மற்றும் ஒரு பத்திரிகையாளர் பாலியல் புகார் தெரிவித்து இருந்தனர். அவர் படத்தில் நடித்த மேலும் வித்யா பாலன், பிபாஷா பாசு உட்பட சில நடிகைகளும் அவர் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர். இதையடுத்து, அக்‌ஷய்குமார் நடிக்கும் ’ஹவுஸ்புல்-4’ படத்தை இயக்குவதில் இருந்து சஜித்கான் நீக்கப்பட்டார்.

சஜித்கான் இயக்கிய ஹிம்மத்வாலா, ஹம்ஷகல்ஸ் ஆகிய இரண்டு இந்தி படங்களில் நடித்திருந்தார் தமன்னா. இந்த படங்கள் சரியாக ஓடவில்லை. இந்தப் பட ஷூட்டிங்கின்போது சஜித்கான் மோசமாக நடந்துகொண்டாரா? என்று தமன்னாவிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் கூறும்போது, ’’சஜித் கான் இயக்கத்தில் நான் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. அந்தப் படங்களின் ஷூட்டிங்கின் போது, எனக்கு அவர் எந்த தொந்தரவையும் தரவில்லை. என்னிடம் அவர் தவறாக நடக்கவில்லை. அவருடன் பணியாற்றும்போது நான் சவுகரிய மாகவே உணர்ந்தேன். மற்ற நடிகைகள் புகார் சொல்லியிருப்பது பற்றி எனக்குத் தெரியாது. ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அனுபவம் இருக்கலாம். எனக்கு அப்படி ஏதும் இல்லை’’ என்றார்.