வணிகம்

நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 அதிகரிப்பு: பின்னலாடை தயாரிப்பாளர்கள் கவலை

Sinekadhara

நூல் விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு கிலோ நூல் விலை 220 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது. இந்த விலை உயர்வு காரணமாக வெளிநாடுகளில் இருந்து பெற்ற ஆர்டர்களை முடித்து கொடுக்கும்போது பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டது. இதனால், பஞ்சு இறக்குமதிக்கு விதித்துள்ள 11 சதவீத வரியை நடப்பாண்டு பட்ஜெட்டில் நீக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதனையடுத்து, அனைத்து ரக நூல்களும் 10 ரூபாய் விலை உயர்ந்து, கிலோ 340 முதல் 390 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக புதிதாக பெறும் ஆர்டர்களுக்கு விலை உயர்த்தும் பட்சத்தில், போட்டி நாடுகளான சீனா, வியட்நாம், கம்போடியா, பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்கு, வெளிநாட்டு வர்த்தகர்கள், தங்கள் ஆர்டர்களை மாற்றி கொடுக்கும் அபாயம் உள்ளதால் ஆர்டர்களை இழக்க நேரிடும் என ஏற்றுமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.