மத்திய அரசின் தடை நடவடிக்கை குறித்து டிக் டாக் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் போன்ற செயலிகளும் தடை செய்யப்பட்டதில் அடக்கம். இதுதொடர்பாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயலிகள் தொடர்பாக நாட்டில் உள்ள குடிமக்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையின் மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து டிக் டாக் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. டிக் டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தியின் அறிக்கை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிக்டாக் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில், “டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இணக்கமான நிலையை உருவாக்கும் செயலில் தற்போது ஈடுபட்டுள்ளோம். டிக்டாக் குறித்து பதிலளிக்கவும், தெளிவுபடுத்தவும் இது தொடர்பான அரசு அதிகாரிகள் எங்களை அழைத்துள்ளனர். இந்திய சட்டத்தின் கீழ் டிக்டாக் செயலி அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றுகிறது, இந்திய பயனர்களின் எந்த தகவலையும் நாங்கள் சீனா உள்ளிட்ட எந்த நாட்டுடனும் பகிர்ந்து கொண்டதில்லை.
நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டால் எதிர்காலத்திலும் அதை செய்ய மாட்டோம். 100 மில்லியன் பயனர்கள், கலைஞர்கள், கதை சொல்லும் நபர்கள், கல்வியாளர்கள், ஆகியோருடன் 14 இந்திய மொழிகளில் டிக் டாக் கிடைக்கிறது. இதன் மூலம் நாங்கள் இணையத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளோம். டிக்டாக் மூலம் பலர் முதல் முறையாக இணைய பயனர்களாகவும் ஆகியுள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே டிக் டாக் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது