வணிகம்

3 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை உயர்வு - பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு

Veeramani

சென்னையில் 22 நாட்களாக உயர்த்தப்படாமலிருந்த பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக உயர்ந்து பீப்பாய்க்கு 80 டாலரை கடந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அதிக அளவாகும். கொரோனா அச்சுறுத்தல் உலகெங்கும் கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதால் பெரும்பாலான நாடுகள் கட்டுப்பாடுகளை பெரிதும் தளர்த்திவிட்டன, இதனால் உலகெங்கும் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரம் எண்ணெய் வள நாடுகள் சந்தை தேவைக்கேற்ப தங்கள் உற்பத்தியை அதிகரிக்கவில்லை. இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்வுப் போக்கிற்கு திரும்பியுள்ளது. இதற்கிடையே சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 பைசா அதிகரித்து 99 ரூபாய் 15 காசுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை 24 காசு உயர்ந்து 94 ரூபாய் 71 காசுக்கு விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதால் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.