வணிகம்

திருச்சி டூ பாங்காக் பறக்கலாம்... வெறும் 3,399 ரூபாயில்..!

webteam

ஏர் ஏசியா நிறுவனம், திருச்சியில் இருந்து முதன்முறையாக பாங்காக்கிற்கு விமான சேவையை தொடங்கியுள்ளது.

புதிய விமான சேவையை பிரபலப்படுத்துவதற்காக, ஏர் ஏசியா நிறுவனம், அறிமுக கட்டணமாக 3,399 ரூபாயில் திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு செல்ல புதிய சலுகை டிக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 1.19 மில்லியன் சுற்றுலா பயணிகள் தாய்லாந்துக்கு விமான டிக்கெட் பதிவு செய்துள்ளதாக தாய்லாந்தின் சுற்றுலாத்துறை இயக்குனர் சொரயா ஹோமுயுன் கூறியுள்ளார். அதில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து தான் அதிக பயணிகள் பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் ஏர் ஏசியா நிறுவனம் சார்பில் ‘தாய் ஏர் ஏசியா’ திருச்சி - பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்தில் நான்கு நாட்களும், பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு திங்கள், செவ்வாய், வியாழன், சனி என வாரத்தில் நான்கு நாட்களும் விமான சேவை நடைபெறும்.

தாய்லாந்து டான் மௌங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஃபூகெட், க்ராபி, சியாங் மாய் மற்றும் சியாங் ராய் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், ஹோ சி மின் நகரம் மற்றும் மக்கா போன்ற சர்வதேச இடங்களுக்கு பயணிகள் எளிதாக செல்ல முடியும். செப்டம்பர் 29, 2017 முதல் ஆகஸ்ட் 28, 2018 வரையிலான பயண டிக்கெட்களை வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்னதாக ஸ்கூட் விமான நிறுவனம் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு வழிப்பயண கட்டணம் ரூ.5 ஆயிரத்து 599 என நிர்ணயித்தது குறிப்பிடதக்கது.