வணிகம்

கடன் வட்டி விகிதத்தை 0.1% உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி

Veeramani

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI)  நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தினை 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.1% உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக கடன் பெற்றவர்களுக்கு இஎம்ஐகள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வட்டி விகித அதிகரிப்பு காரணமாக எம்சிஎல்ஆரில் கடன் பெற்றவர்களுக்கு இஎம்ஐகள் அதிகரிக்கும். அதாவது வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றின் மாதத்தவணை(இஎம்ஐ) அதிகரிக்கும். இந்த சூழலில் எஸ்பிஐயின் ஈபிஎல்ஆர் விகிதம் 6.65 சதவீதமாகவும், ரெப்போவுடன் இணைக்கப்பட்ட கடன் விகிதம் (ஆர்எல்எல்ஆர்) ஏப்ரல் 1 முதல் 6.25 ஆகவும் உள்ளது.



இந்த திருத்தத்தின் மூலம், ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் முந்தைய 7 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த திருத்தப்பட்ட எம்சிஎல்ஆர் விகிதம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ தனது கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பிறகு, கோட்டக் மஹிந்திரா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஆக்சிஸ் வங்கிகளும் தனது வட்டி விகித அதிகரிப்பை அறிவித்தன. வரும் நாட்களில் மற்ற வங்கிகளிலும் இந்த கடன் வட்டி விகித அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.