வணிகம்

கார் கடன், நகை - தனிநபர் கடன்களுக்கு எஸ்பிஐ சலுகை

நிவேதா ஜெகராஜா

விழாக்காலம் தொடங்குவதை அடுத்து வாகனக் கடன், நகைக்கடன், தனிநபர் கடன் வழங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்திருக்கிறது.

கார் கடன் வாங்குபவர்களுக்கு 100 சதவீத பரிசீலனை கட்டணத்தை ரத்து செய்திருக்கிறது. மேலும், வங்கியின் செயலியான யோனோ மூலம் கார்லோன் வாங்கும் பட்சத்தில் 0.25 சதவீத வட்டி சலுகை அறிவித்திருக்கிறது. யோனோ வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 7.5 சதவீதத்தில் இருந்து கார் லோன் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது.

நகைக்கடனுக்கு 0.75 சதவீத வட்டியை குறைத்திருக்கிறது. ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியில் தங்க நகைக்கடன் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல யோனோ செயலி மூலம் கோல்ட் லோன் விண்ணப்பிப்பவர்களுக்கு பரிசீலனை கட்டணம் ரத்து செய்யப்படுகிறது என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

பர்சனல் லோனை பொறுத்தவரை, பரிசீலனை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்கிறது. கொரோனா முன்கள பணியாளர்கள் பர்சனல் லோன் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வட்டியில் 0.50 சதவீத சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே சலுகை இதர கடன்களிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

டெபாசிட்:

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெபாசிட்தாரர்களுக்கு கூடுதல் வட்டியை வழங்க முடிவெடுத்திருக்கிறது. 75 நாள், 75 வாரம் 75 மாத டெபாசிட்களுக்கு 0.15 சதவீத வட்டி கூடுதலாக வழங்கப்படும். ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14 வரை முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்றும் எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

ஆகஸ்ட் 31-ம் தேதி வரைக்கும் வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு பரிசீலனை கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என ஏற்கெனவே எஸ்பிஐ அறிவித்திருந்தது.