மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதைச் செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கேட்காமலே ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்கு தொடங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதன்மூலம், ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்கில் வீட்டு உபயோக, காஸ் சிலிண்டருக்கான மானியம் உள்ளிட்ட சமூக நல நிதியுதவிகள் தானாக சென்று சேர்ந்து விடுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஏர்டெல் பேமென்ட் வங்கி எங்கிருக்கிறது என முகவரி தெரியாத பலரும், தங்கள் பணத்தை எப்படிப் பெறுவது என்று தெரியாமல் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார்களையடுத்து, ஏர்டெல் நிறுவனத்திடம் கேள்வியெழுப்ப தேசிய அடையாள அட்டை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஒருவரது விருப்பத்தைக் கேட்காமல், அவரது ஆதார் விவரங்களைக் கொண்டு வங்கிக் கணக்கு தொடங்குவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என ஏர்டெல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.