அம்பானி குடும்பம்
அம்பானி குடும்பம் ட்விட்டர்
வணிகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: இயக்குநர் குழுவில் வாரிசுகளை களமிறக்கிய முகேஷ் அம்பானி!

Prakash J

இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் எரிசக்தி முதல் தொழில்நுட்பம் வரை எனப் பல்வேறு துறைகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதன் தலைவராக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார். அவருடைய மனைவி நீட்டா அம்பானி, அந்நிறுவனத்தின் உயர்நிலை நிர்வாகக் குழுவில் இடம்பெற்று இருந்தார்.

mukesh ambani

அதேநேரத்தில், இவர்களுடைய வாரிசுகளான மகள் இஷா அம்பானி, மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகிய யாரும், தாய் அமைப்பான ரிலையன்ஸ் உயர்நிலை நிர்வாக குழுவில் அவர்கள் இடம்பெறாமல் இருந்தனர். முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, ரிலையன்ஸ் ரீடெய்ல்சின் தலைவராகவும், மகன் ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராகவும், மற்றொரு மகன் ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் டிஜிட்டல் சர்வீசஸ் தலைவராகவும் உள்ளனர். அவர்கள் அந்தந்த துணை நிறுவனத்தின் நிர்வாக குழுவிலும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக அம்பானியின் வாரிசுகளான மூன்று பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயர்நிலை நிர்வாகக் குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அப்போது, நிர்வாகக் குழு இயக்குநர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி விலகினார். அவரது ராஜினாமாவை நிர்வாகக் குழு ஏற்றுக்கொண்டது. இருப்பினும், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் என்ற முறையில், நிர்வாகக் குழு கூட்டங்களில் நிரந்தர அழைப்பாளராக நீட்டா அம்பானி தொடர்ந்து பங்கேற்பார் என்று நிர்வாகக் குழு அறிவித்தது.

நீட்டா & முகேஷ் அம்பானி

அதைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானியின் வாரிசுகளான ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, இஷா அம்பானி ஆகியோரை நிர்வாகக் குழுவில் இயக்குநர்கள் (நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமிப்பதற்கான) பதவியில் சேர்க்க பங்குதாரர்களுக்கு நிர்வாகக் குழு சிபாரிசு செய்தது. அத்துடன், முகேஷ் அம்பானி வாரிசுகள் அப்பொறுப்பை ஏற்கும் நாளில் இந்த நியமனம் அமலுக்கு வரும் என்று நிர்வாகக் குழு கூறியுள்ளது. பின்னர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில், முகேஷ் அம்பானியின் வாரிசுகளுக்கு பதவி அளித்ததற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு, வாரிசுகள் கையில் பொறுப்பை ஒப்படைக்கும் செயலாகக் கருதப்படுகிறது.