கொரோனா பெருந்தொற்று காலத்தில் அம்பானியின் சொத்துமதிப்பு இரட்டிப்பாகியிருப்பதாக ஆக்ஸ்பாம் (OXFAM) ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸானது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மிகவும் ஏழைகளாகவும் மாற்றியுள்ளது. கொரோனா தொற்று பரவிய முதல் மாதத்தில் பங்குச் சந்தை சரியத் தொடங்கியதும், பங்குகளின் மதிப்பு குறைந்து அவற்றை வைத்திருப்போரின் சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டது.
ஆனால் 9 மாதங்களுக்கு பிறகு நிலைமை தலைகீழானது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது அதிலிருந்து மீள பெருநிறுவன உரிமையாளர்களுக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத்திலிருந்து மீள சில மாதங்களே ஆனதாக ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்திற்குள் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. மார்ச் 18 ஆம் தேதி 36.8 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்துமதிப்பு, தற்போது 78.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. போர்ப்ஸ் பத்திரிக்கையில் உலக செல்வந்தர் பட்டியலில் 21 ஆவது இடத்திலிருந்த அம்பானி, தற்போது 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.