பெண்களின் சேமிப்புக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்ட மகிளா சம்மான் சேமிப்புத் திட்டத்தில் இணைய மார்ச் 31 கடைசி தேதியாக உள்ள நிலையில், இதுவரை இத்திட்டத்தில் சேராத பெண்கள் சேர்ந்துகொண்டு சேமிப்பை தொடங்களை. குறைந்தபட்சமாக 1000 ருபாய் முதல் சேமிப்பை தொடங்கும் இந்த திட்டத்தில் என்ன பயன் , வட்டி எவ்வளவு என்பதை விரிவாக பார்க்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) என்பது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நிதிப் பாதுகாப்பு மற்றும் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். 2023 ஆம் ஆண்டு Department of Economic Affairs-ஆல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இரண்டு ஆண்டுகள் சேமிக்கும் வசதியை பெண்களுக்கு தருகிறது.
இந்த திட்டத்தில் எந்தவொரு பெண்ணும் ஒரு கணக்கைத் திறக்கலாம். மைனர் பெண்களுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாவலர் சார்பாக ஒரு கணக்கைத் திறக்கலாம்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மட்டுமே, சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின்கீழ் கணக்கைத் திறப்பதற்கு அரசாங்கம் எந்த வயது வரம்பையும் அல்லது கட்டுப்பாடுகளையும் குறிப்பிடவில்லை.
தற்போது, இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது, இது காலாண்டுக்கு ஒருமுறை கணக்கில் வரவு வைக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தபால் நிலையங்கள் அல்லது எந்தவொரு குறிப்பிட்ட வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.
ஒரு கணக்கிற்கு ₹1,000 முதல் ₹2 லட்சம் வரை வைப்புத் தொகைகள் செய்யப்படலாம்.
இரண்டு ஆண்டுகள் நிலையான கால அவகாசம் உள்ளது; இருப்பினும், ஒரு வருடத்திற்குப் பிறகு 40% வரை முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
பின்வரும் சூழ்நிலைகளில் கணக்கை முன்கூட்டியே மூடலாம்.
கணக்கு வைத்திருப்பவர் எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் கணக்கை மூட விரும்பினால், கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு மூடப்பட்டால், வழங்கப்படும் 7.5% விகிதத்திற்குப் பதிலாக, ஆண்டுக்கு 5.5% வட்டி விகிதம் கொடுக்கப்படும். 2 சதவீதம் வட்டி குறைக்கப்படும்.
கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், அசல் தொகை மற்றும் வட்டி நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும்.
மைனர் சார்பாக கணக்கு திறக்கப்பட்டால், நோய் அல்லது பாதுகாவலரின் மரணம் போன்ற கருணை காரணங்களுக்காக கணக்கை முன்கூட்டியே மூடலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சரிபார்ப்புக்காக தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் கணக்கு வைத்திருப்பவருக்கு அசல் தொகைக்கு வட்டி வழங்கப்படும்.
பெண்களுக்கான இந்த சேமிப்பு திட்டம் மார்ச் 31-க்குள் முடிவடைவதால், இதில் சேர நினைக்கும் பெண்கள் முன்கூட்டியே சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம்.