வணிகம்

ஜியோவின் புத்தாண்டு கேஷ்பேக் ஆஃபர்!

webteam

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சலுகையாக ரூ.3,300 கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் தொடங்கி பொங்கல் வரை பண்டிகை நாட்கள் தொடர்ந்து வருவதால் பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டங்களில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளன. இதன்படி ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்கள் ரூ.399 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் சர்ப்ரைஸ் கேஷ்பேக் ஆஃபராக ரூ.3,300 வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கயாளர்களுக்கு வழங்கி வந்த ‘ட்ரிபிள் கேஷ்பேக் ஆஃபர்’ சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டமாக ஜியோ இந்த புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. முன்பு வழங்கி வந்த ரூ.2,599 கேஷ்பேக் ஆஃபரை தற்று பின்னுக்கு தள்ளி தற்போது ரூ.3,300 வரை புதிய கேஷ்பேக்கை அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் வரும் ஜனவரி 15, 2018-க்குள் ரூ.399 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக மைஜியோ செயலிக்கு ரூ.400 கேஷ்பேக் அனுப்பபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜியோ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 மதிப்புள்ள 8 ரீசார்ஜ் வவுச்சர்கள் அளிக்கப்படுகிறது.

மேலும், மொபைல் வாலெட்கள் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.300 வரையில் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் சிறப்பு சலுகையாக ரீசார்ஜ் செய்யும் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,600 வரையில் ஷாப்பிங் வவுச்சர்கள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்காக புத்தாண்டு சிறப்பு தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஜியோ ஆஃபரால் மற்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.