வணிகம்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தமா?: அமைச்சர் பதில்

webteam

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான நகைக் கடன்களும் முன்னறிவிப்பு ஏதுமின்றி வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், காமராஜரின் 118-ஆவது பிறந்தநாளையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அப்படி எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று கூறினார்.