வணிகம்

பெண் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு..! அதிக வட்டி தரும் அரசின் சேமிப்பு திட்டங்கள் இதோ!

webteam

வீட்டில் பெண்குழந்தை இருக்கிறதா? கவலை வேண்டாம்... பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள் என்னென்ன?  என்று பார்க்கலாம்.

தனது சந்ததியினருக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்பதே இந்தியாவில் உள்ள பல பெற்றோர்களின் மனநிலையாக உள்ளது. தங்களின் குழந்தைகளின் எதிகாலத்தை நினைத்தே வாழும் பெற்றோர்கள், தங்களின் வருவாயில் சீட்டு போடுதல், நகை வாங்குதல் என பலவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் பெண் குழந்தையின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் சுகன்யா சம்ரிதி திட்டம்.  இந்த திட்டத்தில் பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு வங்கிகள், தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கலாம்.

ஆண்டுக்கு குறைந்த பட்சமாக ரூபாய் 250 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1.50 லட்சம் வரை சேமிக்க முடியும். இத்தகைய கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கான வட்டி அவ்வப்போது மத்திய பட்ஜெட்டில் மாற்றி அறிவிக்கப்படுகிறது. எந்த பெண்ணின் பெயரில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ அந்த பெண் உயர் கல்வி பயிலும் போது குறிப்பிட்ட தொகையை வெளியே எடுத்துக்கொள்ள முடியும். பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பிறகு, திருமணத்திற்கு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளலாம்.

21 ஆண்டுகள் கழித்து கணக்கு முடியும் பொழுது சேமிப்பில் உள்ள தொகை வட்டியுடன் வழங்கப்படும்.

குறிப்பாக ஒரு நபர் தனது 3 வயது பெண் குழந்தைக்கு ஆண்டுக்கு 50,000 ரூபாய் வீதம் சுகன்யா சம்ரிதி திட்டத்தில் சேமிக்கிறார் என வைத்துக்கொள்வோம், 15 ஆண்டுகளுக்கு அவர் செலுத்திய தொகையானது 7,50,000 ரூபாயாக இருக்கும். இத்திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டியின் விகிதமானது ஆண்டிற்கு 7.6 % மாக உள்ளது. ஆக, 21 ஆண்டுகளில் அவர் பெரும் வட்டியானது ரூபாய் 13,71,718 ரூபாய் சேர்த்து முதிர்வுத்தொகையாக ரூபாய் 21,21,718 ரூபாய் கிடைக்கப்பெறுவார்.

இதன் இடையில் உயர் கல்வி மற்றும் திருமணத்திற்கு பணம் எடுக்கப்பட்டால் முதிர்வு தொகையானது வேறுபடும். இது தவிர, ppf எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், மியூட்சுவல் ஃபண்டுகள், வங்கி டெபாஸிட்டுகள் போன்றவற்றிலும், பெண்குழந்தைகளுக்காக சேமிக்கலாம். மேலும், பெண்குழந்தையின் வயதிற்கு ஏற்ப, ஆபரணதங்கம், தங்க பத்திரம், கோல்ட் ஈடிஎஃப் போன்றவற்றிலும் முதலீடு செய்யலாம்.