வணிகம்

இந்தியாவில் உணவு விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்

webteam

இந்தியாவில் உணவு விலை உயர்வு காரணமாக , சில்லறை பணவீக்கம் சற்று உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஏப்ரல் முதலே பொருட்கள் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டதால், உணவு விலை கணிசமாக உயர்ந்துவந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வணிகச் செயல்பாடுகளும் வணிக நிறுவனங்களும் மிகப்பெரும் இழப்புகளைச் சந்தித்துவருகின்றன. மத்திய அரசு அமல்படுத்திய தொடர் ஊரடங்குகளால், அதிக அளவில் விவசாயத்தில் முன்னணி வகிக்கும் மாநிலங்கள் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முறையாக விநியோகம் செய்யமுடியால் தவித்தன. ஆகஸ்ட் 6 முதல் 10 ஆம் தேதி வரையில் 45 பொருளாதார நிபுணர்களிடம் ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பை நடத்தியது.

அதில், பணவீக்க அளவு ஜூன் மாதத்தில் 6.09 சதவீதமாக இருந்தது. தற்போது அது 6.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. " ஜூலை மாதத்தின் கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸ் பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் 6 சதவீத கொள்கை வரம்பைவிட நிலையானதாக இருப்பதை காண்கிறோம். அதிக பயன்பாடு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன" என்கிறார் பொருளாதார நிபுணர் பிரகாஷ் சக்பால்.

இந்த நிலையில், கோடையில் செய்த பயிர்களின் அறுவடை காரணமாக செப்டம்பர் மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்டுகிறது.