ஜிஎஸ்டி வரி முறை அமலானால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என்கின்றனர் விவசாயிகள். மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு இனி திரும்பப்பெறப்படும் என்பதே விவசாயிகளின் கவலையாக உள்ளது.
உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, பூச்சி மருந்திற்கு 18%, உரத்திற்கு 12% வரி விதிக்க உள்ளனர். மேலும் டிராக்டர், பம்ப்செட் போன்ற விவசாய உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வேளாண் பொருட்களுக்கு வாட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வந்துள்ள ஜிஎஸ்டி வரியால் ஏற்படும் விலை உயர்வு பெரும் சுமையாக அமையும் என்று விவசாயிகள் வருத்தப்படுகின்றனர்.
ஏற்கனவே வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு, வேளாண் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு கூடுதல் சுமையாகிவிடும் என்கிற அச்சம் எழுந்துள்ளது. அதனால் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு தொடர்ந்து வரி விலக்கு கிடைக்க மத்திய அரசு உதவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.