பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளை விற்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்போது 60 ஆயிரம் கோடிக்கும் மேல் கடனில் தத்தளித்து வருகிறது. நஷ்டத்திலிருந்து ஏர் இந்தியாவை மீட்க மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்தும் அது பலன் தரவில்லை என்று கூறப்படுகிறது. ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்கும் அரசின் முதல் முயற்சி தோல்வியடைந்தது. எனினும் பங்குகளை விற்கும் முயற்சியை அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
2018-ம் ஆண்டு முதலே ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 90 சதவீத பங்குகளை தனியாருக்கு கொடுக்க மத்திய முயற்சித்தது. ஆனால் தனியார் நிறுவனங்கள் வாங்க முன்வரவில்லை. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்கு உள்ள முதலீடுகளைத் திரும்பப் பெறுவதன் ஒரு பகுதியாக, கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை விற்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நூறு சதவிகித பங்குகளையும், கூட்டு நிறுவனமான AISATSஇன் 50 சதவிகித பங்குகளையும் விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் வருகிற மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
100% பங்குகள் விற்பனை என்றால், ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாகும். மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து எந்த நிறுவனம் ஏர் இந்தியாவை கையகப்படுத்தப்போகிறது என பலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஏர் இந்தியா பங்குகளை முழுவதுமாக விற்பதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''இந்த வணிக முயற்சி தேச விரோதம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் நீதிமன்றம் செல்வேன்'' என தெரிவித்துள்ளார்